அமைவிடம்:
'பாகனேரி நாடு (Paganeri Nadu)' பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (தற்போதைய சிவகங்கை) மாவட்டத்தில் காளையார் கோவில் , கல்லல், திருப்பத்தூர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களின் பகுதிகளை உள்ளடக்கியது.சற்றேறக்குறைய 750௦
சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்த பகுதியாகும்.அதாவது கிழக்கில் அரண்மனை சிறுவயல் , காளையார் கோவில், தெற்கில் மறவமங்கலம், ராஜசிம்ம மங்கலம், மேற்கில் சிவகங்கை , சோழபுரம், வடமேற்கில் திருக்கோட்டியூர், வடக்கில் பட்டமங்கலம் வரை விரவிக் காணப்படுகிறது.இவற்றுள் காளையார் கோயிலில் எட்டில் மூன்று பங்கு பாகனேரி நாட்டினுள் அடங்கும். தவிர கல்லல் ,திருப்பத்தூர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களின் சிறு பகுதிகளும் இந்நாட்டில் இடம் பெறுகின்றன. இதன் எல்லைகளைக் குறிக்கச் சூலக்குறி பொறித்த எல்லைக்கற்கள் எல்லை நெடுகிலும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நடப்பட்டுள்ளன.
இந்நாடு சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு , இங்கு வாழும் மக்களால் ஒருவகை தன்னாட்சி முறையில் பேணிக் காக்கப்பட்டு வருகிறது.
22 1/2 கிராமம்..
மொத்தம் 23 கிராமங்கள் இந்நாட்டின் கீழ் வருகிறது.
பாகனேரி(Paganeri) ,நகரம்பட்டி, காடனேரி, மாங்காட்டுப்பட்டி, நெற்புகப்பட்டி,புலவன்பட்டி, கற்றப்பட்டு,வடக்குக் காடனேரி,அம்மன்பட்டி,வீளநேரி, காளையார் மங்கலம், கருங்காலக்குடி, கௌரிப்பட்டி, பனங்குடி, கோவினிப்பட்டி, கீழக்கோட்டை, கீரனூர், முத்தூர், பையூர், விராணியூர்,அல்லூர், சித்ததூர், பெரியகண்ணனூர்.
இவற்றுள் கருங்காலக்குடிக்கு மட்டும் நாட்டமைப்பு உருவாகிய காலத்தில் இருந்த மக்கள் தொகையின் அடிப்படையில் அரைக்கிராமம் என்ற தகுதி வழங்கப்பட்டது. ஆதலின் 22 1/2 கிராமம் எனப்பட்டது.
இருபத்து இரண்டரைக் கிராமங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நாட்டில் தற்போது சிறியனவும், பெரியனவுமாக 128 ஊர்கள் உள்ளன. சில கிராமங்கள் தனியே கிராமங்கள் என்ற தகுதியையும் ,சில கிராமங்கள் சில உட்கடைக் கிராமங்களையும் சேர்த்து கிராமம் என்னும் தகுதியையும் பெற்றன.
மேலவெள்ளிஞ்சம்பட்டி, கீழவெள்ளிஞ்சம்பட்டி, தச்சன் புதுப்பட்டி, புத்திரிப்பட்டி, கோவில்பட்டி, ஆளவளத்தான் பட்டி ஆகிய ஆறு உட்கடைக் கிராமங்கள் கத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவை. திருத்திப்பட்டி, பிளாமிச்சாம்பட்டி,மும்முடிசன்பட்டி, சக்கரவர்த்திப்பட்டி, சீவூரணி, சூரம்பட்டி, வீரநேந்தல் ஆகிய ஏழு உட்கடைக் கிராமங்கள் பனங்குடி,கோவினிப்பட்டி கிராமங்களின் கீழ் உள்ளன. இவை தற்போது பாகனேரி நாட்டில் இருந்து பிரிந்து தனித்து இயங்குகிறது.
பெரிச்சிக்கோயில், ஆளவிலாம்பட்டி, சடையன்பட்டி, கொலாம்பட்டி, கொங்கராம்பட்டி, ஊடேந்தல்பட்டி, பொய்யாமணிப்பட்டி, கொட்டகுடி ஆகிய எட்டு உட்கடைக் கிராமங்கள் கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவைகளாகும். இவைகளும் தற்போது பாகனேரி நாட்டில் இருந்து பிரிந்து தனித்து இயங்குகிறது
பாகனேரி நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள கீரனூர், முத்தூர், பையூர், விராணியூர்,அல்லூர், சித்ததூர், பெரியகண்ணனூர் ஆகிய ஏழு கிராமங்களும் அவற்றின் உட்கடைக் கிராமங்களும் ஏழூர்ப்பற்று என வழங்கப்படுகின்றன.
இவற்றுள் கீரனூர் என்ற கிராமம் ஏழூர்ப்பற்றுக்கு தலைமை இடமாகும்.
நட்பு மற்றும் பகை நாடுகள்:
பாகனேரி நாட்டுப் பெருநான்கேல்லையைச் சூழ்ந்து மற்ற பிற நாடுகளும் அமைந்துள்ளன. அவற்றுள் சில நட்பாகவும் சில பகைமை உணர்வுடன் இருந்தன, இருக்கின்றன. இவற்றுள் மல்லாக்கொட்டை, கண்டரமாணிக்கம், குன்னங்கோட்டை, மங்கலம், பூக்குழி ஆகிய நாடுகள் பாகனேரி நாட்டுடன் நீண்ட காலமாக நட்புறவு கொண்டுள்ளன. ஆறூர்வட்டகை, பட்டமங்கலம் நாடுகள் பகைமை உணர்வுடன் உடையன. உதாரணத்திற்கு வாளுக்குவெளித் தேவனுக்கும் வல்லத்தரயனுக்கும் ஏற்பட்ட விரோதத்தால் இன்றளவும் இவ்விரு நாடுகளும் பாகைமை உணர்வுடனேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.